தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக கேரள அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது.
தொற்றின் மூலம் பரவாத நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் விருதை உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.
உலகம் முழுவதும் 7 சுகாதார அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பெற்றுள்ளார். இந்த விருது சுகாதாரத் துறையில் கேரளத்தின் அயராத சேவையை அங்கீகரிப்பதாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா டீச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்ற மாநில சுகாதாரத்துறையின் சாதனைக்கு அனைத்து சுகாதார ஊழியர்களையும் அவர் வாழ்த்தினார். முன்னதாக கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றி இருந்தார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.