கரோனா பெருந்தொற்றுக்கிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஊரடங்கு தளர்வில் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு, தொடர் கனமழை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தில்லியில் காய்கறி விலை முன்பு இருந்ததை விட 50 முதல் 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோவுக்கு 40 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று கொத்தமல்லி, பூண்டு, மிளகாய் விலையும் கடுமையாக உயர்ந்ந்துள்ளது. காய்கறி விலை உயர்வால் விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் நிலையில், காய்கறி விலை உயர்வால் அதனை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.