யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவில் மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் வடமாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசும், தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.