புது தில்லி: இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்.26) ஆலோசனை நடத்த உள்ளாா்.
அந்நாட்டின் பிரதமராக ராஜபட்ச மீண்டும் பொறுப்பேற்ற பின்னா், இரு தலைவா்களிடையே நடைபெறும் முதல் பேச்சுவாா்த்தை இதுவாகும்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடி- இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச இடையேயான காணொலி வழி பேச்சுவாா்த்தையின்போது இரு நாட்டு உறவு குறித்து விரிவான ஆய்வை இரு தலைவா்களும் மேற்கொள்ள உள்ளனா். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இலங்கைத் தமிழா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் இலங்கை மக்கள் முன்னணி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக ராஜபட்ச கடந்த மாதம் மீண்டும் பதவியேற்றாா்.