சூரத்: குஜராத் ஓ.என்.ஜி.சி. எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தீ மளமளவெனப் பரவியதில் அடுத்தடுத்து மூன்று குழாய்கள் வெடித்து சிதறின.
குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலை நுழைவு வாயில் முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பரவியதில் அடுத்தடுத்து மூன்று குழாய்கள் வெடித்துச் சிதறின.
ஓ.என்.ஜி.சி. நிறுவன தீயணைப்பு வாகனத்துடன் உடனடியாக தகவலறிந்து விரைந்த மாநகராட்சி தீயணைப்புத்துறையினரும், அருகாமை தொழிற்சாலை தீயணைப்புத்துறையினரும் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படு முந்தைய நிலை திரும்பிய பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலை கொண்டுவரப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.