ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வியாழக்கிழமை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த பிரம்மோற்சவ நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் திருமலைக்கு வருகை தந்தோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாளான இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.
திருப்பதி மலையில் கர்நாடக அரசு சார்பில் ரூ.200 கோடி செலவில் கர்நாடக விருந்தினர் மாளிகை கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையில் கர்நாடக முதல்வரும், ஆந்திர முதல்வரும் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை ஹனுமந்த வாகன சேவையும், மாலை 4 மணிக்கு தங்கத் தேரோட்டத்திற்குப் பதிலாக உள்ளேயே சர்வ பூபால சேவையும் நடைபெற உள்ளது.