48 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து, லக்னெளவில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள சந்தன் மருத்துவமனை, மாயோ மருத்துவமனை, சரக் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் சமீபத்தில் 48 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வந்துள்ளது. இந்த 48 நோயாளிகளுக்கும் சிகிச்சை தாமதம், கரோனா பரிசோதனை செய்தல், கரோனா வார்டுகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து லக்னெள மாவட்ட நிர்வாகம் தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு கேட்டுள்ளது.
'சில மருத்துவமனைகளில் நோயாளிகள் நேரடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு கரோனா வார்டுக்கு மாற்றப்படுவதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது' என லக்னெள மாவட்ட அதிகாரி அபிஷேக் பிரகாஷ் கூறினார்.
"கரோனா அல்லாத மற்ற உடல்நல பிரச்னைகளுக்கு நோயாளிகள் வந்தால் மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். அவர்கள் என்ன சிகிச்சைக்கு வந்தார்களோ அதற்கேற்ப வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா பரிசோதனை என்று சிகிச்சை அளிக்காமல் ஒரு சில நாள்கள் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பு நேரிடுகிறது' என்றும் அவர் கூறினார். ஆனால், மருத்துவமனைகள் தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 48 பேரும் கரோனா நோயாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.