சண்டிகர்: பஞ்சாபில் குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த வணிக கட்டடம் இடிந்து விழுந்து நால்வர் பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாபின் தலைநகர் சண்டிகருக்கு அருகே அமைந்துள்ளது தேரா பஷ்ஷி நகரம். இங்குள்ள மீரா மல்லி மொஹல்லா என்ற இடத்தில குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே வணிக வளாக மையம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தின் மேற்கூரை வியாழன் மதியம் திடீரென்று இடிந்து விழுந்தது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை படைப் பிரிவினர் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஆனால் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை படைப் பிரிவின் இயக்குநர் சத்ய நாராயண் பிரதான் தெரிவித்துள்ளார்.
நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.