தில்லியில் கரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை என்று
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தில்லி மருத்துவமனை மற்றும் கரோனா முகாம்களில் கரோனா பரிசோதனை விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிக அளவில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை. தில்லி அரசு மருத்துவமனைகளில் அடுத்த 6 முதல் 7 நாள்களுக்கான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி தில்லியில் 1,000 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் காலியாக உள்ளது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தில்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
கரோனா சிகிச்சைகான பிளாஸ்மா இருப்பும் போதிய அளவு உள்ளது. அதிகபட்சமாக வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கே தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தில்லி சுகாதாரத்துறை செயலி மூலம் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகள் குறித்து வெளிப்படையாக அறிந்துகொள்ளலாம்'' இவ்வாறு அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார்.