விவசாய சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் ஞாயிற்றுக் கிழமை இரண்டு மசோதாக்களும், நேற்று (செவ்வாய்க் கிழமை) ஒரு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பது போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓபிரையன், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்திலேயே அவர்கள் பேரணியிலும் ஈடுபட்டனர்.