புது தில்லி: தீவிர கரோனா பரிசோதனை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613- ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது. உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது, உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5% ஆக உள்ளது.
நாட்டிலேயே, 17 மாநிலங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.