கொல்கத்தா: கனமழை காரணமாக ஏற்பட்ட பல நிலச்சரிவு சம்பவங்களால், சிக்கிம் மாநிலத்தை மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
சிக்கிம் - மேற்கு வங்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 10 - சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் காங்டோக் முதல் கலிம்போங் மாவட்டம் மற்றும் சிலிகுரி நகரங்களை இணைக்கிறது. அதுபோல மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், சிக்கிமின் சில பகுதியில் அடுத்த சில நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களிலும் திங்கள்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலைப் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிம்போங் - தோர்ஸ் பகுதியில் முற்றிலும் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை 10, 31 ஆகியவை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும், சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.