வேளாண் மசோதாவுக்கு எதிராக பஞ்சாபிலிருந்து தில்லி நோக்கி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாபை சேர்ந்த சேர்ந்த லோக் இன்சாஃப் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கட்சியினர் பஞ்சாபிலிருந்து தில்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அரசின் உத்தவையும் மீறி பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.
இதனால் பஞ்சாப் மாநிலத்தின் ஷம்பு கிராமத்தில் பரபரப்பு நிலவியது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையில் ஷம்பு கிராமத்தில் எல்லைப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் கருப்பு கொடிகளை கட்டிக்கொண்டு பதேகார் ஷபீப் பகுதியிலிருந்து பேரணியாகச் சென்றனர். அவர்களை பானிப்பட் பகுதியில் தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டியடித்தனர்.