அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அனுமதிகோரி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மத்திய அரசை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஸ்ரீராம்ஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கோயிலின் கட்டுமான அடிக்கல்நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளைப் பெற அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 1,500 டாலர் காசோலை பெறப்பட்டதாகத் தெரிவித்த பிரகாஷ் குப்தா கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதிலிருந்து இதுவரை ரூ.75 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது என்றார்.
"அறக்கட்டளை நாட்டில் உள்ள பக்தர்களிடமிருந்து வழக்கமான நன்கொடைகளைப் பெற்று வருகிறது. இப்போது வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் காசோலைகள் மூலம் நன்கொடை அளிக்கின்றனர்," என்று குப்தா கூறினார்.
இந்த வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற அறக்கட்டளை இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவித்த குப்தா விரைவில் என்.ஆர்.ஐ கணக்கைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.