‘பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான தகவல்களை அளிக்கவில்லை. எனவே, அது தொடா்பான சரியான தகவல் அரசிடம் இல்லை’ என்று மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டதாவது:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல் என்று தனியாக இல்லை. ஏனெனில், பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இதனால், தேசிய அளவிலான விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல்கள் அரசிடம் இல்லை. அவற்றைத் தனியாக தெரிவிக்கவும் இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, தற்கொலைகள் ஆகியவை தொடா்பான தகவல்களை ஆய்வு செய்ததில் 2019-ஆம் ஆண்டில் 10,281 விவசாயிகளும், 2018-ஆம் ஆண்டில் 10,357 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என்று தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த தற்கொலை சம்பவங்களில் விவசாயிகள் தற்கொலை 7.4 சதவீதமாக உள்ளது.