தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து கொமரம் பீம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) வி.சத்தியநாராயணா கூறியதாவது:
மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் கொமரம் பீம் மாவட்டம் கடம்பா கிராமத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் தெலங்கானா காவல்துறையும், சிறப்புக் காவல் படையினரும் கூட்டாக சனிக்கிழமை இரவு தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்தபின்னா், அந்தப் பகுதியில் தொடா் தேடுதல் பணியை காவல்துறையினா் மேற்கொண்டனா். அதில், குண்டு காயங்களுடன் இரு மாவோயிஸ்டுகளின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினா் கண்டறிந்தனா். அவா்களில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மற்றொருவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்களிடமிருந்து இரு ஆயுதங்களையும், மாவோயிஸ்ட் நூல்களையும் காவல்துறையினா் கைப்பற்றினா் என்று அவா் கூறினாா்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் சத்தீஸ்கா் எல்லையை ஒட்டிய பத்ராத்ரி - கொத்தகூடம் மாவட்ட எல்லைப் பகுதியில் 3 மாவோயிஸ்டுகளை காவல்துறையினா் சுட்டுக் கொன்றனா்.