ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப் போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை உதவி - லியுடெனன்ட் குமுதினி தியாகி மற்றும் உதவி லியுடெனன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள்.
இந்திய கடற்படையின் கண்காணிப்புப் பிரிவில் இவ்விரண்டு பெண் அதிகாரிகளும் தேர்ச்சி பெற்றதற்கான நிகழ்ச்சி ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பல் தளத்தில் இன்று நடைபெற்றது. கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் பட்டதாரிகளான பெண் அதிகாரிகள் இருவரும், 2018-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்தனர்.
இவர்களில் உதவி - லியுடெனன்ட் ரித்தி சிங், அவரது குடும்பத்தில் இருந்து நாட்டுக்காக முப்படைகளில் பணியாற்றும் மூன்றாவது தலைமுறையாவார். அவரது தாத்தா ராணுவத்திலும், தந்தை கடற்படையிலும் பணியாற்றியவர்கள்.
தனது பணி குறித்து உதவி - லியுடெனன்ட் குமுதினி தியாகி கூறுகையில், கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் மட்டுமே நிலத்திலும், காற்றிலும், நீரிலும் பணியாற்ற முடியும். எனவே, இந்த சவாலானப் பணியை தேர்வு செய்தேன் என்கிறார்.