ஹிமாசலப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரவையின் பெண் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஷியாமா ஷர்மா கரோனா தொற்று காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு வயது 70. கடந்த ஐந்து நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி காணப்பட்டதால், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொண்டுசெல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஹிமாசல அமைச்சரவை அமைச்சரும் பாஜக தலைவருமான ஷியாமா ஷர்மாவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் கட்சிக்கும் பொதுமக்களுக்கும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது டிவிட்டர் பதிவில் இந்தியில் தெரிவித்துள்ளார்.