தோல் நிறத்தின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டப்படுவதுபோன்ற தகவலை விளம்பரங்கள் வெளியிடக் கூடாது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அஸ்வினி சௌபே தெரிவித்தார்.
அழகு மற்றும் வெண்மையாக்கும் கிரீம்களை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா என, மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அமைச்சர் அஸ்வினி சௌபே அளித்த பதில்:
விளம்பர கருப்பொருளை ஆராய்வதற்கும், தவறான, ஆதாரமற்ற விஷயங்களை தெரிவிக்கும் விளம்பரங்கள் மீதான புகார்களை விசாரிப்பதற்கும் நுகர்வோர் புகார் கவுன்சிலை இந்திய விளம்பரங்கள் தர கவுன்சில் அமைத்துள்ளது.
இந்த நுகர்வோர் புகார் கவுன்சில் விளம்பர நிறுவனங்கள் சுய ஒழுங்காற்றுதலை மேற்கொள்வதற்கு உதவியாக சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த விளம்பரங்கள் தோல் நிறத்தின் அடிப்படையில் எதிர்மறையான சமூக நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கூடாது. நிறத்தின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டப்படுவதுபோன்ற தகவலை விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
குறிப்பாக, கருப்பாக இருப்பவர்கள் அழகற்றவர்களாக, மகிழ்ச்சி இல்லாதவர்களாக, மன அழுத்தம் மற்றும் கவலையில் இருப்பதாகக் காண்பிக்கக் கூடாது.
மேலும், எதிர்பாலினத்தவரை ஈர்ப்பதில், திருமணத்தில், வேலைவாய்ப்பு பெறுவதில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் சித்திரிக்கக் கூடாது உள்ளிட்டவை அந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.