புது தில்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை மத்திய அரசு எப்படி உறுதி செய்யும்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளில் அவர் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று வேளாண்துறை அமைச்சர் கூறுகிறார். தனியார் மூலம் விற்பனை என்பது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு கிடைக்கும் தொகை என்பது மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. வேளாண்துறை அமைச்சர் மாயம் செய்வது போல குறைந்தபட்ச ஆதரவு விலையை கிடைக்கச் செய்ய முடியும் என்றால், அவர் என் இதுவரை அதனைச் செய்யவில்லை?
எந்த விவசாயி தனது விளைபொருளை எந்த வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் என்பது அமைச்சருக்கு எப்படித் தெரியும்? இதுபோல நாடு முழுவதும ஒருநாளில் நடக்கின்ற லட்சக்கணக்கான பணப்பரிவர்தனைகளை அமைச்சரால் எப்படி அறிய முடியும்? அவரிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லையென்றால், அவரால் எப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை கிடைக்கச் செய்ய முடியும்?
அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்புகின்ற அளவிற்கு விவசாயிகள் முட்டாள்கள் என்று அமைச்சரும் மத்திய அரசும் நினைக்கிறார்களா?
மோடியின் அரசானது அவர் கூறியது போல ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், விவசாய வருமானம் இரட்டிப்பு மற்றும் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.