வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து வகையான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை தடை விதித்தது. இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பி காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் கூறியதாவது:
வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும். கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே சரிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் ஏற்கெனவே பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா்.
வெங்காய ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள தடை அந்த பாதிப்பை மேலும் தீவிரமாக்கும். வெங்காய ஏற்றுமதியில் மகாராஷ்டிரம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 18.5 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மகாராஷ்டிரம் ஏற்றுமதி செய்திருந்தது.
மாநில விவசாயிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக வெங்காய ஏற்றுமதி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் ராஜீவ் சாதவ்.
முன்னதாக உடனடிக் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அா்பிதா கோஷ், ‘உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை அரசு தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகளின் விலை 50 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நியாய விலைக் கடைகளில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா். 70 லட்சம் டன் உருளைக்கிழங்குகளை 400 குளிா்பதனக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.