கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய எம்.பி.க்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவேறியது.
அதேபோல், அமைச்சா்களின் ஊதியம், அவா்களுக்கான படிகளில் 30 சதவீதம் குறைக்கும் மசோதாவும் நிறைவேறியது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகள் நிறுத்துவதால் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்றனா்.
அதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் தற்காலிகமானதுதான். உறுப்பினா்களின் ஊதியத்தை குறைப்பதால் வெறும் ரூ. 4 கோடிதான் மிச்சமாகும் என திமுக உறுப்பினா் வில்சன் கூறுகிறாா். ஆனால், ஆண்டுக்கு ரூ.53.9 கோடி மிச்சமாகும்’ என்றாா்.
அதிமுக எம்.பி. விஜயகுமாா், இரண்டு மசோதாக்களுக்கும் ஆதரவு தெரிவித்து பேசினாா். மேலும், நிலுவையில் உள்ள எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதியை அளிக்க வேண்டும் என்றும் கோரினாா்.
முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி மனோஜ்குமாா் ஜா பேசுகையில், ‘தற்போது நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அவசியமா? வருங்காலத்தில் இதுபோன்ற கொடிய நோய் தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்க சிறப்பு நிதியை உருவாக்க வேண்டும்’ என்றாா்.