கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்தியாவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் (42,08,431) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவே அதிகம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உலகளவில் மொத்தம் குணமடைந்தவர்களில் இந்தியாவில் மட்டும் 19 சதவிகிதம். இதன்மூலம், குணமடைவோர் விகிதம் 80 சதவிகிதத்தை (79.28) நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 95,880 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 60 சதவிகிதம் பேர். இவற்றில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 22,000 (23 சதவிகிதம்), ஆந்திரத்தில் மட்டும் 11,000 (12.3 சதவிகிதம்). மொத்தம் குணமடைந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன."
வோல்டோமீட்டர் தரவுகளின்படி இந்தியாவில் இதுவரை 42,08,431 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 41,91,894 பேர் குணமடைந்துள்ளனர்.