சரக்கு மற்றும் சேவைகளுக்கான செலவை குறைக்கும் வகையில், சாலை போக்குவரத்து செலவுகளை கணிசமாக குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''சாலைப்போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவைகளுக்கான செலவு பெருமளவு குறையும்.
மேலும் அனைத்து மிக முக்கியத் துறைமுகங்களையும் நெடுஞ்சாலைகள் மூலம் அரசு இணைத்துள்ளது. இதன் மூலம் பொருள்கள் நுகர்வோரை அடைவதற்கான கால தாமதம் குறைக்கப்படும்.
மேலும் மாநிலங்களில் நிகழும் சாலை விபத்துகளை குறைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதிக அளவிலான விபத்துகள் இளைஞர்களின் அதிவேகத்தாலே நிகழ்கிறது.
சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் சாலைகளில் உள்ள தடுப்புகள் பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் விரைவில் மருத்துவ சேவையை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது'' இவ்வாறு அவர் கூறினார்.