இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆவணங்களை வைத்திருந்ததாக தில்லியில் பத்திரிகையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் பத்திரிகையாளரான ராஜீவ் சர்மா யூ டியூப் சேனல்கள் மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த தகவல்களை தெரிவித்து வருகிறார்.
இதனிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தகவல்களை வைத்திருந்ததாகக் கூறி அவரை கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, பாதுகாப்புத்துறை சார்ந்த வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததால் அவரை கைது செய்தோம் என்று துணை ஆணையர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பத்திரிகையாளர் ராஜீவ் குமாரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் பறிமுதல் செய்து அவருக்கு வந்த அழைப்புகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜீவ் குமார் கைது செய்யப்படும் நாளன்றும் தமது யூ டியூப் சேனலில் சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து இரண்டு விடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.