கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் கரோனா சமூக பரவலாக மாறியதை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். இதனை தற்போது ஒப்புக்கொள்கிறோம் என்று தில்லி சுதாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் முன்பு இருந்ததை விட கரோனா பரவல் இரட்டிப்பாகியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இதனிடையே தில்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''தில்லியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது. இதனை முன்பே ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். தில்லியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொள்கிறது.
எனினும் சமூக பரவலுக்கான காரணங்களை மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மட்டுமே விளக்க வேண்டும். தில்லியில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக இரட்டிப்பு எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகி வருகிறது.
மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகும் மக்கள் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அப்பகுதியில் சமூகப் பரவல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தான் இறுதிசெய்ய வேண்டும்'' என்று சத்யேந்திர ஜெயின் கூறினார்.