நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் மொத்தமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,000க்கும் குறைவானவர்களே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மகாராஷ்டிரத்தில் 3,02,135 பேரும், கர்நாடகத்தில் 1,03,650 பேரும், ஆந்திரத்தில் 88,197 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 68,235 பேரும், தமிழகத்தில் 46,610 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 உள்பட ஒட்டுமொத்தமாக 52,14,678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று நேற்று 1,174 பேர் உள்பட இதுவரை 84,372 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 41,12,552 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 10,17,754 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.