அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் கரோனா தொற்றால் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தின் கெளகாத்தியைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி மைஹேண்டிக் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இந்தத் தகவலை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கரோனா உறுதியான பின் 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் பல அசாமி பாடல்களைப் பாடியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். "செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொண்டனர்" என்று மூதாட்டி மைஹேண்டிக் கூறினார்.