மும்பை: மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டில் மொத்த வரி வருவாய் 22.5 சதவீதம் சரிவைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2019 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான வரி வசூல் ரூ.3,27,320.2 கோடி என்ற அளவில் இருந்த நிலையில், நிகழாண்டில் அது ரூ.2,53,532.3 கோடி என்ற அளவில் மட்டுமே வசூலாகியுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித் துறையின் மும்பை மண்டல அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியது:
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் முன்கூட்டி செலுத்தும் (அட்வான்ஸ்) வரி வசூல் 76 சதவீதம் அளவுக்கு குறைந்து, மொத்த வரி வருவாய் 31 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது.
அதுபோல, செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமான வரி ரூ.1,47,004.6 கோடி என்ற அளவிலும், மாநகரகாட்சி வரி ரூ.99,126.2 கோடி என்ற அளவிலும் வசூலாகியுள்ளது. இதுபோல பிற வரி வருவாய்கள் உள்பட மொத்தம் ரூ. 2,53,532.3 கோடி வசூலாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது, இது 22.5 சதவீதம் குறைவாகும் என்று அவர் கூறினார்.