தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,159 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,159 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,003-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 30,443-ஆக உள்ளது. தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,33,555-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) ஒருநாளில் மட்டும் 53,094 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23,29,316 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 80.94 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய அளவில் 78.59 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1005-ஆக அதிகரித்துள்ளது. எனினும் இறப்பு விகிதம் 0.60 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. இது தேசிய அளவில் 1.62 சதவிகிதமாக உள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.