புது தில்லி: நாடாளுமன்றத்துக்கு ரூ.861.90 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை ரூ.865 கோடியில் கட்டித்தருவதாக, எல் அன்ட் டி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதைவிடக் குறைவான தொகைக்கு, ரூ.861.90 கோடியில் புதிய கட்டடத்தைக் கட்டித்தருவதாக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. எனவே, ஒப்பந்தப்புள்ளி கோரியதில் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதன்கிழமை வெற்றிபெற்று, ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தைப் போன்றே புதிய கட்டடமும் கட்டப்படும். கட்டுமானப் பணிகள் தொடங்கிய அடுத்த 21 மாதங்களில் பணிகள் நிறைவடைந்துவிடும். கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம், முக்கோண வடிவில் கட்டப்படவுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப சுமார் 1,400 பேர் வரை அமரும் வகையில் புதிய கட்டடம் இருக்கும். புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, தற்போதைய கட்டடத்திலேயே நாடாளுமன்றம் இயங்கும். அதன் பிறகு, தற்போதைய நாடாளுமன்றம் வேறு அலுவலகங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.