புது தில்லி: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பை இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வழங்குவதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பல நிதி நெருக்கடியை சந்தித்தன. அதையடுத்து, கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் வகையிலான அவசரச் சட்டத்தை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. அதன் மூலமாக வங்கிகளுக்கான விதிமுறைகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறும் நோக்கில் "வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா, 2020', மக்களவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. விவாதத்துக்குப் பிறகு, வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது.