கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியது:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கதோலி இட்டாவா பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் புண்டி மாவட்டத்தின் இந்தர்கர் பகுதியில் உள்ள கமலேஷ்வர் கோயிலுக்கு புதன்கிழமை சென்றுகொண்டிருந்தனர். அப்போது கோத்ரா கிராமம் அருகே சம்பல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
மோசமான நிலையில் படகு இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த மாநில முதல்வர் அசோக் கெலாட், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.