மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் அடைந்திருக்கும் பின்னடைவுக்கு, மத்திய அரசின் மோசமான நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டில் ரொக்கப் பணத்தை அடிப்படையாக வைத்து வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்த அமைப்புசாரா தொழிலாளர்களை கடுமையாக பாதித்தது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் ரொக்கப் பணத்தைக் கொண்டே இயங்கி வருகிறார்கள். சிறிய கடை மற்றும் சிறுதொழில் நடத்துவோரும் கையில் ரொக்கப் பணத்தைக் கொண்டே தொழிலை நடத்துகிறார்கள். மோடி சொல்கிறார் பணப்புழக்கமே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, அவ்வாறு இந்தியாவில் பணப்புழக்கம் என்பதே இல்லாமல் போனால், சிறு கடைகள், விவசாயிகள், சிறு தொழிலாளர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.