மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டப்பேர்வையில் மாநில அரசு சார்பில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக பஞ்சாப் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டது.
அதனைத் தொடா்ந்து, சனிக்கிழமை கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று மசோதாக்களை பேரவை விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தரிவால் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.