பெண்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளையும் பயங்கரவாதக் குற்றமாகக் கருத வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ‘பெண்கள், அமைதி, பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை நடத்திய கருத்தரங்கில் இந்தியா தெரிவித்ததாவது:
பெண்களுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் வன்முறைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை.
பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், நாகரிக சமுதாயத்தின் அடித்தளத்தையே சிதைத்து வருகிறது.
எனவே, பெண்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு உதவியளிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போதும் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்கும்போதும், அந்த அமைப்புகளின் மற்ற குற்றங்களோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் பாதுகாப்பு கவுன்சில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், கரோனோ நோய்த்தொற்று நெருக்கடியாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.