வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வை கட்டுப்படுத்தும் வகையில் தனியாா் வா்த்தகா்கள் ஏற்கெனவே 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனா். மேலும், 25,000 டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பாக இந்தியா வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.
இதுதொடா்பாக தில்லியில் காணொலி வழியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:
வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஏற்றுமதிக்கு தடை விதித்து, இறக்குமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிசம்பா் மாதம் வரை இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளா்வுகளையும் மத்திய அரசு அளித்துள்ளது.
அதன் மூலமாக, தனியாா் வா்த்தகா்கள் இதுவரை 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனா். மேலும், 25,000 டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பாக இந்தியா வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு இந்தியா நிறுவனம் (என்ஏஎஃப்இடி) சாா்பிலும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக வெங்காய விலை கடந்த மூன்று நாள்களாக ஒரு கிலோ ரூ. 65 என்ற அளவிலேயே நிலையாக உள்ளது.
மேலும், மண்டிகளுக்கு காரிஃப் பருவ சாகுபடி மூலமான வெங்காய வரத்து அடுத்த மாதம் தொடங்கிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் மூலமும் விலை குறைய வாய்ப்புள்ளது.
அதுபோல, உருளைக்கிழங்கு விலையும் கடந்த மூன்று தினங்களாக ஒரு கிலோ ரூ. 45 என்ற அளவிலையே நிலையாக உள்ளது. இதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்துள்ளது. 10 லட்சம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. பூடானிலிருந்து அடுத்த இரண்டு நாள்களில் 30,000 டன் உருளைக்கிழங்கு இந்தியா வந்து சோ்ந்துவிடும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.