ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஏழு பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
தாந்திகொண்டா அருகே மலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அதன் பிரேக் செயலிழந்ததையடுத்து, பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
அங்குள்ள, வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் திருமண விழாவில் பங்கேற்ற 20 பேர் தனது சொந்த ஊரான கோகாவரம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், ராஜமஹேந்திரவரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.