ஆந்திரத்தில் கரோனா தொற்றால் 13,000 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் வீரவணக்க வாரத்தை முன்னிட்டு விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர் நீலம் சாவ்னி, டிஜிபி டி கவுதம் சவாங் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலர் சாவ்னி, காவல்துறையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பாராட்டிய அவர், மருத்துவ, சுகாதார, வருவாய்த் துறையில் உயிரிழந்த கரோனா முன்னணி களப்பணியாளர்களை நினைவு கூர்ந்தார்.
மேலும், டிஜிபி சவாங் பேசுகையில், கரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசு ஆதரவாக இருக்கும். ஆந்திரத்தில் தற்போது, வைரஸ் பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. நாட்டில் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்துவதில் ஆந்திர காவல்துறை முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோன்று ஆந்திர மாநிலம் முழுவதும் 13,000 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்தார்.