புது தில்லி: பசுமை தில்லி மொபைல் செயலியைத் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது,
இந்த செயலி மாசு எதிர்ப்பு விதிமுறைகளை மீறுவது குறித்து புகார்களைப் பதிவு செய்யப் பயனர்களுக்கு உதவும். மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் ஈடுபடுத்த அரசு விரும்புகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய மாற்றமும் ஏற்படாது.
பசுமை தில்லி பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் எரியும் கழிவுகள், தொழில்துறை மாசுபாடு மற்றும் தூசி தொடர்பான புகார்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்கலாம்.
இதையும் படிக்கலாம்: சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் செயலி பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் பெறப்பட்ட புகார்கள் தானாகவே சம்பந்தப்பட்ட துறைக்கு வந்து சேரும்.
புகைப்படம் மற்றும் விடியோ புகாரை அடிப்படையாகக் கொண்டு, சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயலி பயன்பாட்டைக் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், புகார்களைக் கண்காணிக்கத் தில்லி செயலகத்தில் ஒரு பசுமை வார் அறை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.