புது தில்லி: குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் சனிக்கிழமை முதல் நாள்தோறும் 2 நீர்வழி விமானங்களை இயக்கப்போவதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை (சர்தார் வல்லபபாய் படேல் சிலை) ஆகியவை இடையே சனிக்கிழமை முதல் (அக். 31) நாள்தோறும் 2 நீர்வழி விமானங்கள் இயக்கப்படும்.
ஸ்பைஸ் ஜெட்டின் துணை நிறுவனமான ஸ்பைஸ் ஷட்டில் மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படும். பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த விமானங்களை சனிக்கிழமை முதல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
"உடான்' திட்டத்தின் கீழ், இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1,500 ஆகும். பயணச் சீட்டுகளை இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமை முதல் (அக். 30) பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.