2020ஆம் மூன்றாம் காலாண்டில் ஓமன் நாட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் குறைந்திருப்பதாக வளைகுடா நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பணி நிமித்தமாக வசித்துவ் வந்த இந்தியர்கள் பலரும் சொந்த நாடு திரும்பினர். ஓமனின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதத்தினர் வெளிநாட்டினர் உள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக இந்தியர்கள் செல்கின்றனர். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக அவர்களின் பணி வாய்ப்புகள் குறைந்தன.
இந்நிலையில் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை அரசின் நடவடிக்கை மற்றும் கரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் குறைக்கவும், அந்நாட்டின் பணிகளில் ஓமானியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஓமனில் இந்தியர்களின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 5,42,091 ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 5,17,702 ஆகவும் குறைந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியர்களின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளதாக வளைகுடா நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது.