தில்லியில் அரசின் மறு உத்தரவு வரும் வரையில் கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டங்களில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லியில் அக்டோபர் 31 வரை கல்வி நிலையங்கள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை பேசிய தில்லி துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கரோனா தொற்று காரணமாக தற்போதைய சூழலில் கல்வி நிலையங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அரசின் மறு அறிவிப்பு வரும்வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக இதே கருத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தில்லி ஐபி பல்கலைக்கழக கல்லூரிகளில் கூடுதலாக 1330 கல்வி இடங்கள் அதிகரிப்பது குறித்தும் தனது அறிவிப்பில் அவர் குறிப்பிட்டார்.