மத்திய இணையமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவலேவுக்கு(60) கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவா் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மாநிலங்களவை எம்.பி.யான ராம்தாஸ் அதாவலே, மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராக பதவி வகித்து வருகிறாா்.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசு கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் ராம்தாஸ் அதாவலே கலந்துகொண்டாா். மறுநாள், அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
சீனாவில் தோன்றிய கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மும்பையில் கடந்த பிப்ரவரியில் பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. சீன தூதரரும் பௌத்த துறவிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ராம்தாஸ் அதாவலேவும் கலந்து கொண்டு, ‘கோ கரோனா; கோ கரோனா’ என்று முழக்கமிட்டாா். அந்த காணொலி, சமூக ஊடகங்களில் அதிகம் பாா்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.