புது தில்லி: இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே நவம்பர் 4- ஆம் தேதி முதல் 3 நாள்கள் பயணமாக நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய- நேபாளம் இடையிலான பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் நேபாளத்துக்கு இந்த பயணத்தை ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
சுமார் 18,000 கி.மீ. நீளமுள்ள இந்திய- நேபாள எல்லையில் நிலவி வரும் முக்கியப் பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டின் ராணுவ அதிகாரிகளுடனும், உயர்நிலை அதிகாரிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நேபாளம் வெளியிட்ட அந்நாட்டின் வரைபடத்திலிருந்த எல்லைப் பகுதிகளில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சில நிலப்பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்ததாக சித்திரிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இருநாடுகளிடையேயான உறவுகளை பேணுவதில் நிலவி வந்த சிக்கலுக்குப்பின் மேற்கொள்ளப்படும் முதல் உயர்நிலை பயணம் இதுவாகும்.
நேபாளம், மியான்மர், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடனான உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஒரு அம்சமாகும்.
நேபாளத்தின் எல்லையிலுள்ள நிலப்பரப்புகளை சீனா அபகரித்ததாக வெளியான தகவல்கள் குறித்தும், அந்நாட்டின் பாதுகாப்பு நலன்களை காப்பது குறித்தும் இந்தப் பயணத்தின்போது இந்தியா விவாதிக்கும் எனத் தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.