நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதிமுறைகள் தொடரும் என்றும் அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடையில்லை, இ-பாஸ் பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட தளர்வு விதிமுறைகளின்படி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.
விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கலாம்.
பொது நிகழ்ச்சிகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அல்லது 200 நபருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.