தெலங்கானாவில் பாஜக வேட்பாளரின் உறவினர் வீட்டில் இருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து ரூ.12 லட்சத்தை பாஜகவினர் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் துபக் தொகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவின் சார்பாக ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலில் முறைக்கேடாக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாக அவர் மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அவருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ரூ.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையினரின் சோதனை குறித்த செய்தியை அறிந்த பாஜகவினர் சோதனை நடந்த இல்லத்தின் முன் குவிந்தனர். அப்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த ரூ.18 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சத்தை பாஜகவினர் பறித்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்திப்பேட்டை ஆணையர் ஜோயல் டேவிஸ், “பாஜக வேட்பாளரின் உறவினர் வீட்டில் இருந்து ரூ.18.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காவலர்களிடமிருந்து பணத்தைப் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.