தஞ்சாவூர்: நெல்லில் ஈரப்பதம் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் அக்டோபர் 27 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றார் மத்திய ஆய்வுக் குழுவைச் சேர்ந்த யாதேந்திர ஜெயின்.
டெல்டா மாவட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் கொள்முதல் செய்ய இயலவில்லை. எனவே ஈரப்பத விதியில் தளர்வு அளிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் பரிந்துரை செய்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சாவூர் அருகே குளிச்சப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லில் மாதிரிகளைச் சேகரித்தனர்.
இதுகுறித்து குழுவைச் சேர்ந்த உணவு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் யாதேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக மண்டல அலுவலகத்தில் பகுப்பாய்வு செய்யப்படும். பின்னர் இந்த அறிக்கை மத்திய அரசிடம் அக்டோபர் 27 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்று யாதேந்திர ஜெயின் கூறினார்.