நாட்டில் தொடர் பண்டிகை கொண்டாட்டங்கள் வருவதால் கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கரோனா பெருந்தொற்று பரவிவரும் இந்தத் தருணத்தில் நடைபெறவுள்ள திருவிழா மற்றும் பண்டிகைகளின் போது நாம் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். வரையறைகளுக்குள் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
ராணுவ வீரர்களை நினைவு கொள்வோம்:
தொடர்பண்டிகை காலங்களில் நாம் ராணுவ வீரர்களையும் நினைவு கொள்ள வேண்டும். எனதருமை ராணுவ வீரர்களே பண்டிகை காலங்களில் நீங்கள் எல்லைப்பகுதியில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது. உங்களது நலன் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிறது என்று தெரிவித்தார்.
ஆதிசங்கரரை புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி:
நமது ஆன்மிகம், யோகக்கலை, ஆயுர்வேதம் ஆகியவை உலகை கவர்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீரவிளையாட்டை ஒத்திருக்கும் நமது 'மல்கம்ப்' விளையாட்டு பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது.
புனிதப் பயணங்களே பாரதத்தை ஒன்றிணைக்கிறது. ஜோதிர்லிங்கங்களும் சக்திபீடங்களும் அடங்கிய அழகிய மாலையே, பாரதநாட்டை ஓரிழையில் இணைக்கிறது.
ஆதி சங்கரர், பாரதத்தின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, மகத்துவம் வாய்ந்த நான்கு மடங்களை நிறுவினார்.
இந்திராகாந்தியை நினைவு கூர்ந்த மோடி:
அக்டோபர் மாதம் 31-ஆம் தேதியன்று வால்மீகி ஜெயந்தியை நாம் கொண்டாடவிருக்கிறோம். நான் மகரிஷி வால்மீகியை வணங்குகிறேன்.
இதே நாளில் தான் நமது முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி அம்மையாரை இழந்தோம். அவர்களையும் நான் நினைவுகூர்ந்து எனது அஞ்சலிகளை உரித்தாக்குகிறேன்.
பண்டிகைகளின் போது கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.