ஹைதராபாத்: தெலங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தெலங்கானாவின் வனபார்த்தி மாவட்டம் கோபால்பெட் வட்டாரத்தில் உள்ளது புத்தாராம் கிராமம். இங்குள்ள குடும்பம் ஒன்றில் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நினைவு தினத்திற்காக குடும்பத்தினர் ஒன்றாகக் கூடியிருந்தனர். சனிக்கிழமையன்று நிகழ்வு முடிந்த நிலையில் இரவு பெண்கள் அனைவரும் உள்ளறையிலும், ஆண்கள் வீட்டுக்கு வெளியேயும் படுத்திருந்தனர்.
அப்போது ஞாயிறு அதிகாலை எதிர்பாராவிதமாக வீட்டில் மழை ஈரத்தில் ஊறிப் போயிருந்த சுவர் சரிந்து விழுந்தது. இதில் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த செவ்வ மாநேம்மா (68), சுப்ரஜா (38), வைஷ்ணவி (21), ரிங்கி (18), மற்றும் உமாதேவி (38) ஆகிய ஐவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரதில் மட்டும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் காரணமாக 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.